Posts

Showing posts from June, 2023

காந்தல்

Image
“ரோ ரோ ரோ எங்கம்மல்லோ… அழாதீங்கம்மோ…”    சகுந்தலாவின் அந்தப் பலவீனமான தாலோலத்தையும் மீறி, அவளின் ஒன்பது மாதப் பெண் குழந்தை வீல்வீலென்று அழுகைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த நீண்ட வரிசை முன்னே நகர்கிற மாதிரி தெரியவில்லை. தாய், சேய் இருவரின் அடிவயிறுகளையும் சுரண்டிக்கொண்டிருந்தது பசி. நேற்றைக்கு பொழுது கவிழ்ந்த நேரத்தில், அரிசிப்பெட்டியில் கடைசியாக மிஞ்சிருந்த குருணையைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்திருந்தாள் அவள். பிள்ளைக்கு மீனாப் பாட்டி கடையிலிருந்து இரவில் கொடுத்துவிட்டிருந்த இட்டிலிகளை ஊட்டிவிட்டிருந்தாள். இப்போது அதெல்லாம் எந்த மூலைக்கு…   இரண்டு மூன்று மாதங்களாகவே இதே கதைதான். ஊரெங்கும் காலரா பரவி ஜனங்கள் சுருண்டுகிடந்தார்கள். ஜனக்கூட்டத்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.  ‘எட்டாங்கிளாஸ் படிச்ச பொம்பளைப் புள்ளைகளை எழும்பூர் ஆஸ்பத்திரியில வேலைக்கு எடுக்குறானுங்களாம்...’ என்று ரிக்‌ஷா வண்டியோட்டும் மூர்த்தியண்ணன், நேற்றிரவுதான் நரியங்காட்டுச் சனங்களிடம் சொல்லிச் சென்றிருந்தார். காலையிலேயே பேங்கர் வீட்டுக்குப் பத்துப் பாத்திரம் தேய்க்கப் பு